மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லமான வேதா நிலையத்தை கையகப்படுத்தியதற்காக, சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் ரூ 67.9 கோடி பணத்தை தமிழ்நாடு அரசு வைப்புதொகையாக செலுத்தியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழ்நாடு அரசு அவசர சட்டம் இயற்றியது. இதற்காக, வீட்டை கையகப்படுத்தும் பணியில் வருவாய் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, வேதா நிலையம் இல்லத்திற்கான இழப்பீட்டுத் தொகையை அரசு நிர்ணயித்து, அந்த தொகையை நீதிமன்றத்தில் வைப்புத்தொகையாக செலுத்தியுள்ளது. சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் ரூ. 67.9 கோடியை தமிழ்நாடு அரசு இழப்பீட்டுத் தொகையாக டெபாசிட் செய்துள்ளது. இந்த தொகையை ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசுகள் உரிமைகோரி பெற்றுக் கொள்ளலாம்.
இந்த தொகையில், வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரித்தொகை மற்றும் செல்வ வரி நிலுவைத் தொகைக்கு ரூ.36.9 கோடி வழங்கப்படக்கூடும். இதனால், வேதா நிலையத்தை கையகப்படுத்துவதற்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாது என்று அரசுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி பதவியேற்ற பின்னர், 2017-ம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்புக்கு இணங்க, வேதா நிலையம் அமைந்துள்ள 0.55 ஏக்கர் நிலத்தை நினைவுச் சின்னமாக மாற்ற கட்சிக்கு பொறுப்பும், உரிமையும் இருக்கிறது. சிட்டி சிவில் கோர்ட்டில் ரூ .68 கோடியை டெபாசிட் செய்துள்ளோம். அவரது வீட்டை நினைவுச் சின்னமாக்குவது தங்கள் பொறுப்பு மற்றும் உரிமை என்று அதிமுக மூத்த தலைவரும், மீன்வளத் துறை அமைச்சருமான டி. ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். வீட்டை நினைவுச் சின்னமாக மாற்றுவது தமிழக மக்கள் மற்றும் அதிமுக கட்சித் தொண்டர்களின் விருப்பமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நிலம் கையகப்படுத்தும் விசாரணையின்போது, தீபாவின் கணவர் மாதவன், தீபக்கின் ஆலோசகர் வழக்கறிஞர் எஸ்.எல்.சுதர்சணம் மற்றும் வருமான வரித்துறை துணை ஆணையர் அஜய் ராபின் சிங் ஆகியோர் ஆஜரானதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
விசாரணையின்போது, சட்ட வாரிசுகள் எழுப்பிய ஆட்சேபனைகள் வழக்கமானவைதான் என்று வேதா நிலையத்தை நினைவுச் சின்னமாக மாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட வருவாய்த் துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை ஒரு பொது நோக்கத்திற்கு ஆனது. இது ஒரு நினைவுச் சின்னமாக, மறைந்த தலைவருக்கு பெருமை சேர்க்கும் அரசின் கொள்கை முடிவாகும். வேதா நிலையத்தை நினைவுச் சின்னமாக மாற்றுவது என்பது, பிளவுபட்ட இரு அதிமுக அணியை இணைப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்றாகும். இதுதவிர, 2016 டிசம்பர் 5-ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரை பகுதியில், அவருக்கு மிகப் பிரமாண்டமான நினைவுச் சின்னம் அரசின் செலவில் கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.