Madras high court orders october18j
[https://chat.whatsapp.com/D8pziz1VidmBRxPBr8rWIj
10/18, 10:50] Sekarreporter 1: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 22ஆம் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார்.
அப்போது திருமாவளவன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மத நல்லிணக்கம், சட்டம் – ஒழுங்கு பிரச்னை சம்பந்தப்பட்டுள்ளதால் மறு ஆய்வு கோர உரிமை உள்ளதாக வாதிட்டிருந்தார்.
மேலும், அணிவகுப்புக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்னை எனவும், அதை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க வேண்டும் எனவும், மாறாக குற்றவியல் வழக்காக விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், அதனால் அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் திருமாவளவன் தரப்பில் வாதிடப்பட்டது.
காவல் கண்காணிப்பாளரையோ, காவல் ஆணையரையோ எதிர்மனுதாரராக சேர்ப்பதால் மட்டும் உரிமையியல் வழக்கை, குற்றவியல் வழக்காக கருத முடியாது எனவும் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய மறுத்து, திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[10/18, 11:17] Sekarreporter 1: கல்வியை பொதுப்பட்டியலில் நீடிக்க செய்வது கூட்டாட்சி கட்டமைப்புக்கு அச்சுறுத்தலானது என தமிழக அரசும், கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றி கொண்டு வரப்பட்ட அரசியல் சட்ட திருத்தம் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் இல்லை என மத்திய அரசும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.
கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றி அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசியல் சட்ட திருத்தத்தை எதிர்த்து அறம் செய்ய விரும்பு அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர் கல்வித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், அரசியல் சட்டம், ஆரம்பத்தில் கல்வி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே விட்டிருந்தது எனவும், கடந்த 1975 முதல் 1977ம் ஆண்டு வரை, 21 மாதங்கள் அவசர நிலை அமலில் இருந்த காலகட்டத்தில், சர்தார் ஸ்வரண் சிங் குழு அறிக்கையின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் முறையான எந்த விவாதமும் நடத்தாமல், கல்வி, மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்வி குறித்த சட்டங்கள் இயற்றும் போது மாநில சட்டமன்றங்களை விட நாடாளுமன்றம் அதிக அதிகாரம் வாய்ந்ததாகி விடுகிறது எனவும், தற்போது தேசிய கல்விக் கொள்கை மூலமாக மத்திய அரசு, மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமையில் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையை ஒழுங்கு படுத்தும் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில், மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறாமல் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனவும் தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா என்பது மாநிலங்கள் அடங்கிய தேசம் என்பதால், ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம் என்ற தத்துவம் கொண்டு வர முடியாது எனவும், நாடு முழுவதற்கும் ஒரே கல்விக் கொள்கை என்பது பொருத்தமற்றது எனவும் கூறப்பட்டுள்ளது.
கல்வி கடைக்கோடி வரை சென்றடைவதை மாநில அரசுகள் மட்டுமே உறுதி செய்ய முடியும் என்பதால் கல்வியை இன்னும் பொதுப்பட்டியலில் நீடிக்க செய்வது கூட்டாட்சி கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களுடன் பல்வேறு சமூக – கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவில், கூட்டாட்சி கட்டமைப்பின் அடிப்படையில் தேசிய வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய – மாநில அரசுகள் பங்களிப்பு வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனித வளர்ச்சிக்கு முதன்மையான கல்விக்கு நிதி ஒதுக்குவது உள்ளிட்டவற்றுக்கு மத்திய – மாநில அரசுகள் இணைந்து முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றி கொண்டு வரப்பட்ட அரசியல் சட்ட திருத்தம் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் இல்லை எனவும் மாறாக பல்வேறு மாநிலங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவே உதவியுள்ளது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசியல் சட்ட திருத்தம், கல்வியின் மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வகை செய்துள்ளது என்பதால், தேசிய கல்விக் கொள்கை, மாநில அரசுகளின் தன்னாட்சி அதிகாரத்தை பறித்து விடுவதாக கூறுவது தவறு எனவும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையை, நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முழு அமர்வு, நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
[10/18, 13:41] Sekarreporter 1: தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி…
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…
794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்…
தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய் என கூறி வழக்கை நிராகரிக்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ. மனுத்தாக்கல் செய்திருந்தார்…
தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க ஆதாரம் உள்ளதாக கூறி அதிமுக எம்.எல்.ஏ. மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு…
[10/18, 13:44] Sekarreporter 1: தனக்கு எதிராக திமுக வேட்பாளர் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோக்குமார், 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதி திமுக வேட்பாளர் செங்குட்டுவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், அரசு இயந்திரத்தை தனது பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்த விவரங்களை மறைத்ததாகவும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள வரம்பை மீறி செலவிட்டுள்ளதாகவும், தபால் வாக்குகள் காரணமின்றி நிராகரிக்கப்பட்ட்டுள்ளதாகவும் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கவில்லை எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், தேர்தல் வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது திமுக வேட்பாளர் செங்குட்டுவன் தரப்பில், உரிய ஆதாரங்களுடன் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கை நிராகரிக்க கூடாது எனவும், விசாரணையின் போது தான் இந்த ஆதாரங்களை நிரூபிக்க முடியும் என வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தேர்தல் வழக்கை விசாரிக்க போதுமான அதாரங்கள் உள்ளதாக கூறி, செங்குட்டுவன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[10/18, 16:46] Sekarreporter 1: கஞ்சிக்கோடு – வாளையாறு ரயில் வழித்தடத்தில் ரயில் மோதி இரு பெண் யானைகள் பலியானது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, தெற்கு ரயில்வே பாலக்காடு மண்டல பொது மேலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யானைகள் பாதுகாப்பது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, கடந்த 14ம் தேதி கஞ்சிக்கோடு – வாளையாறு இடையே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைக் கூட்டத்தின் மீது ரயில் மோதியதில் இரு பெண் யானைகள் பலியாகியுள்ளதாகவும், காயமடைந்த குட்டி யானை காணவில்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக தெற்கு ரயில்வே பாலக்காடு மண்டல பொது மேலாளர் நவம்பர் 24 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.
மேலும், யானைகள் வழித்தடத்தின் வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை குறைக்க உத்தரவிட்டும், அதற்கு சாத்தியமில்லை என பாலக்காடு மண்டல பொறியாளர் அளித்த அறிக்கை என்பது எந்தவிதமான அறிவியல் ஆய்வு அடிப்படையானதல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், யானைகள் வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தைக் குறைத்து விபத்துக்களை தடுப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கும்படியும், இக்குழு ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 24ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
மற்றொரு வழக்கில், யானைகள் வழித்தடத்தில் உள்ள சாலையில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அலாரங்கள் 24 மணி நேரமும் எச்சரிக்கை வாசகங்களை ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் போது, யானைகளால் கடந்து செல்ல முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த அலாரங்களை அகற்றி விட்டு, வேகத்தடைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல, கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் யானைகள் வழித்தடங்களில் அனுமதியின்றி செயல்படும் செங்கற்சூளைகளை மூட உத்தரவிட்ட நீதிபதிகள், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளனர்.
[10/18, 16:54] Sekarreporter 1: அகம்பாவத்தையும், சகிப்புத்தன்மையின்மையும் காலணிகளைப் போல வீட்டுக்கு வெளியே விட்டுச் செல்ல வேண்டும் எனவும், இல்லாவிட்டால் தம்பதியின் வாழ்க்கை மட்டுமல்லாமல் குழந்தைக்ளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர், தனது நான்கு வயது குழந்தையை கடத்திச் சென்று, கணவர் சட்டவிரோதமாக காவலில் வைத்திருப்பதால், குழந்தையை மீட்டுத்தர உத்தரவிட வேண்டும் எனக் கோரி அப்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, கணவனை பிரியும் முன், மனுதாரர் தனது குழந்தையை, வேண்டுமென்றே கணவரிடம்
விட்டுச் சென்றுள்ளார் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2020ம் ஆண்டு முதல் தந்தையிடம் குழந்தை வளர்ந்து வரும் நிலையில் அதை சட்டவிரோத காவலில் இருப்பதாக கருத முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், அகம்பாவமும், அன்பும் ஒரு சேர பயணிக்க முடியாது எனவும், அகம்பாவம் உறவை கெடுத்து விடும் எனவும் தெரிவித்த நீதிபதிகள், அகம்பாவம், சகிப்பு தன்மையின்மையை காலணிகளாக வீட்டுக்கு வெளியில் விட்டு செல்ல வேண்டும் எனவும், இல்லாவிட்டால் தம்பதியருக்கு மட்டுமல்லாமல், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
மனைவி என்பவர் குடும்பத்தின் ஆணிவேர் போன்றவர் எனவும், கணவர் அடிமரம் எனவும் மற்ற உறுப்பினர்கள் கிளைகள் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், வேர் சேதமடைந்து விட்டால் மொத்த குடும்பமும் பாதிப்படையும் என்பதால், கணவன் – மனைவி தங்கள் குழந்தைகளின் நலனை கருதி அகம்பாவங்களை விட்டொழிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
[10/18, 16:55] Sekarreporter 1: அகம்பாவமும் அன்பும் ஒரு சேர பயணிக்க முடியாது; அகம்பாவம் உறவை கெடுத்து விடும்..
அகம்பாவமும், சகிப்புத்தன்மையின்மையும் காலணிகளைப் போல வீட்டுக்கு வெளியே விட்டுச் செல்ல வேண்டும்..
இல்லாவிட்டால் தம்பதியின் வாழ்க்கை மட்டுமல்லாமல் குழந்தைக்ளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும்- நீதிமன்றம்..
கணவரிடம் இருந்து குழந்தையை மீட்டுத்தரக்கோரி மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு..
குழந்தைகளின் நலனை கருதி அகம்பாவங்களை விட்டொழிக்க வேண்டும்- நீதிமன்றம் அறிவுறுத்தல்..
[10/18, 17:32] Sekarreporter 1: ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கொத்தனார் மணிகண்டன் என்பவர், கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவியை, வாயைப் பொத்தி, தனது வீட்டுக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் துறைமுகம் அனைத்து மகளிர் போலீசார், மணிகண்டனுக்கு எதிராக போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
[10/18, 17:42] Sekarreporter 1: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய கூடாது.
திருச்சி கண்டோண்மெண்ட் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகரை தாக்கியதாக பதிவான வழக்கில் ஜாமீன் பெற்று திருச்சியில் கையெழுத்திட சென்றபோது கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டதாக பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு.
வழக்கு தொடர்பாக திருச்சி கண்டோண்மண்ட் காவல்துறை பதிலளிக்கவும், உதவிஆய்வாளரை வழக்கில் சேர்க்கவும் நீதிபதி உத்தரவு.
– நீதிபதி வி.சிவஞானம்
[10/18, 18:15] Sekarreporter 1: போக்குவரத்து காவல்துறையினர் அவதூறாக பேசி தாக்குதல் நடத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட கால் டாக்சி ஓட்டுனர் குடும்பத்தினருக்கு ஆறு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் சென்னையில் கால் டாக்சி ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு தரமணி எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சிக்னல் அருகே காரில் வந்த மணிகண்டனை நிறுத்தி போலிசார் அவரை தாக்கியதோடு, அவதூறாகவும் பேசியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த அவர் அதே இடத்தில் பெட்ரோல் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியது.
விசாரணையின்போது சம்பந்தப்பட்ட காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை மறுத்தனர். சீட் பெல்ட் அணியாமலும், ஓட்டுனருக்கான சீருடை இல்லாமலும் வாகனம் ஓட்டியதால் அவருக்கு நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். எனவே அவரது மரணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என தெரிவித்தனர்.
இதனையடுத்து ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் பிறப்பித்துள்ள உத்தரவில், காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாவதாக கூறி, உயிரிழந்த மணிகண்டன் தாயாருக்கு இழப்பீடாக ஆறு லட்ச ரூபாயை நான்கு வார காலத்திற்குள் வழங்க உத்தரவிட்டார்.
இந்த தொகையை வேளச்சேரி போக்குவரத்து காவல் அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் தாமரைச்செல்வன், வேளச்சேரி போக்குவரத்து பிரிவு காவலர் சக்தி கணேசன், தரமணி சட்டம் ஒழுங்கு தலைமை காவலர் மணிகண்டன் ஆகியோரிடமிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் வசூலிக்கவும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது