11 Mla case SC news daily Thanthi online

புதுடெல்லி,

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில்  தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்  உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த 11 எம்எல்ஏக்கள்  அரசுக்கு எதிராக வாக்களித்தனர். 

இதை தொடர்ந்து 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில்  வழக்குத் தொடர்ந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், ரங்கசாமி, உள்ளிட்டோரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், ஐகோர்ட் அமர்வு 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவின் மீது சட்டப்பேரவைத் தலைவர் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும்  அவர் உத்தரவு எதையும் பிறப்பிக்காத நிலையில் அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடவோ, முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தவோ முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். 

ஆனால், பேரவைத் தலைவர் பிறப்பிக்கும் உத்தரவு நீதிமன்றத்தின் மறுஆய்வுக்கு உட்பட்டது என்று தெரிவித்த நீதிபதிகள், 11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர். இதனை எதிர்த்து திமுக எம்எல்ஏ சக்கரபாணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில்  மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஓராண்டுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை ஏதும் இல்லாமல் நிலுவையில் இருந்தது. கடந்த வாரம் தலைமை நீதிபதியை சந்தித்து திமுக தரப்பில் முறையிடப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு வரும் என்று சுப்ரீம் கோர்ட்  அறிவித்தது.

அதன் படி இன்று  11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது  இந்த வழக்கில் 3 ஆண்டுகள் தாமதம் தேவையற்றது.  ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் முடிவு எடுக்காமல் சபாநாயகர் ஏன் காலதாமதம் செய்தார்? தேர்தல் ஆணையத்தில் இருந்த வழக்கை காரணம் காட்டி காலதாமதம் செய்தது ஏற்புடையதா?  இதில் பேரவை தலைவருக்கு உள்ள சிக்கல் என்ன? பேரவைத் தலைவர் எப்போது நடவடிக்கை எடுக்க போகிறார்? தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தாரா?  என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாறியாக கேள்வி எழுப்பினர். 

இது குறித்து  தமிழக அரசின் தலைமை வழக்கறிஞா் விஜய் நாராயணன் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கு 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

You may also like...