விலை உயர்வை கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா

விலை உயர்வை கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா என சி.எம்.டி.ஏ., மார்கெட் கமிட்டி ஆகியவை வரும் திங்கட்கிழமை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கோயம்பேட்டில் மூடப்பட்டுள்ள தக்காளி விற்பனை மைதானத்தை திறக்கக் கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில்,
1200 சதுர அடி 2,400 சதுர அடி அளவு கொண்ட கடைகளில் மட்டுமே வாகனங்களை நிறுத்த இடம் உள்ளதாகவும், 150 முதல் 600 சதுர அடி வரை மட்டுமே இடமுள்ள தங்களை போல சிறிய கடைதாரர்கள் மைதானத்தை பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டது

சி.எம்.டி.ஏ. தரப்பில் லாரிகளில் வந்து பொருட்களை இடமாற்றம் செய்யும் இடத்தில் விற்பனை செய்யக்கூடாது என்ற விதிகள் உள்ளதாகவும், அதை மீறி அந்த மைதானத்திலேயே விற்பனை நடந்ததால் வாகனங்களை நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, லாரிகள் நிறுத்தக்கூடிய இடத்தில் விற்பனையை மேற்கொள்ளக்கூடாது என்ற விதிகள் சரியானது தான் என்ற போதிலும், தற்போதுள்ள தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கருத்தில் கொண்டு, நான்கைந்து சிறு வியாபாரிகள் இணைந்து ஒரு லாரியை வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரும் பட்சத்தில் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்து சரக்கை இறக்க மட்டும் அனுமதி அளிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

தக்காளி விலை குறையும் வரை ஓரிரு வாரங்களுக்கு லாரிகளை நிறுத்தி கொள்ள அனுமதிப்பது குறித்து
சி.எம்.டி.ஏ., கோயம்பேடு மார்கெட் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு
வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமை (நவம்பர் 29) தள்ளிவைத்தார்.

You may also like...