விஜிபி பொழுதுபோக்கு மையத்தில் ராட்சத ராட்டினம் விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்துமாறு காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜிபி பொழுதுபோக்கு மையத்தில் ராட்சத ராட்டினம் விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்துமாறு காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கழிபட்டூரை சேர்ந்த பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில், கடந்த 2016ம் ஆண்டு சென்னையை அடுத்த விஜிபி பொழுதுபோக்கு மையத்திற்கு சென்றபோது,அங்கிருந்த வேவ் ஸ்விங்கர் ராட்சத ராட்டினத்தில், மனைவி மற்றும் இளைய மகள் விளையாடியபோது ராட்டினம் சரியாக இயக்கப்படாததால் தூக்கி வீசபட்டு இருவரும் படுகாயம் அடைந்ததாகவும், இதில் இளைய மகளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் இளைய மகள் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த நீலாங்கரை போலீசார் ஆலந்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால் குற்றப்பத்திரிகையில் இளைய மகள் இறந்ததை மறைத்து, தனியார் மருத்துவமனை மருத்துவர் அளித்த அறிக்கையின்படி படுகாயம் அடைந்ததாக மட்டுமே குறிப்பிட்டுள்ளதாக மனுவில் தெரிவித்தார். காவல்துறை மோசமான விசாரணை நடத்தி விஜிபி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் எனவே மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை, நீதிபதி எம். தண்டபாணி முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, டிஎஸ்பி அந்தஸ்தில் அதிகாரி ஒருவரை நியமித்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.அந்த வழக்கை 12 வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்.
மேலும், மாநில சட்ட பணிகள் ஆணையக் குழுவில் பாதிக்கபட்டோர் இழப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற மனு அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.