முந்தைய பணியின் போது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இந்திய கடல்சார் பல்கலை கழக வளாக இயக்குனரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய பணியின் போது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இந்திய கடல்சார் பல்கலை கழக வளாக இயக்குனரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.l

சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைகழகத்தின் முதல் துணை வேந்தராக கடந்த 2008ம் ஆண்டு நியமிக்கப்பட்ட விஜயன், மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, அதே பல்கலைகழகத்தின் வளாக இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடல் சார் பல்கலைகழக இயக்குனராக நியமிக்கப்பட்ட பிறகும், துணை வேந்தருக்கான வசதிகளை பயன்படுத்தி வந்ததாகவும், இதனால் பல்கலைகழகத்திற்கு 22லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறி, அந்த தொகையை திருப்பிச் செலுத்தி பல்கலைகழகம், விஜயனுக்கு உத்தரவிட்டது.

இதேபோல, இந்திய கடல்சார் பல்கலைகழக துணை வேந்தராக நியமிக்கப்படும் முன் பணியாற்றிய இடத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்ததை அடுத்து அவருக்கு எதிராக துறைரீதியான விசாரணை நடத்திய கடல்சார் பல்கலைக்கழகம், அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து விஜயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுக்களில், முந்தைய பணியில், நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றத்திற்காக இந்த பதிவியில் இருந்து நீக்கியது செல்லாது எனவும் துணை வேந்தருக்கான வசதிகளை பயன்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தையும் ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், இந்திய கடல்சார் பல்கலை கழக பணியாளர் விதிகளின்படி, இயக்குனராக உள்ள மனுதாரரை பணி இடைநீக்கம் செய்யவோ, பணி நீக்கம் செய்யவோ முடியாது எனக் கூறி, அவரது பணி நீக்கத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

துணைவேந்தர் பதவிக்காலம் முடிந்ததும், அந்த வசதிகளை பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாமல் தற்போது அதை அபராதமாக வசூலிக்க முடியாது எனக் கூறிய நீதிபதி, அபராதம் விதித்த உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

You may also like...