பெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்க்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்க்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த வசந்தி என்பவர் பணம் சம்பாதிக்கும் ஆசையில் 15 வயதான சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். பல கட்டங்களில் பலர், அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

இதனால் தாயின் பிடியில் இருந்து தப்பித்த சிறுமி, திருப்பதி சென்று அங்கு பழம் விற்கும் மூதாட்டியிடம் தஞ்சமடைந்துள்ளார். சிறுமி மீது சந்தேகம் கொண்ட ஆந்திரா போலீசார், அவரை மீட்டு சென்னை அனுப்பி வைத்துள்ளனர்.

சென்னை திரும்பிய சிறுமி, பலர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், சிறுமியின் தாய் வசந்தி உள்பட 10 பேருக்கு எதிராக விபச்சார தடுப்பு சட்டம், போக்ஸோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், சிறுமியின் தாய் வசந்திக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதேபோல இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் இருவருக்கு தலா ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. மீதமுள்ளவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும், விடுதலையை எதிர்த்து போலீஸ் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டது.வழக்கு விசாரணையின்போது,அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி,பாதிக்கப்பட்ட சிறுமி சாட்சி தெளிவாக உள்ளது, அவரது தாயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது என்று வாதிட்டார். முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதி வேல்முருகன், பாதிக்கப்பட்ட சிறுமி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் அடையாளம் காட்டியுள்ளார் என்பதால், குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, சிறுமியின் தாய் உள்ளிட்ட மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

மற்றவர்களுக்கு ஏழு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதித்து நீதிபதி வேல் முருகன் தீர்ப்பளித்தார்.

You may also like...