பரனூர் விமான நிலையம், என்.எல்.சி, சிப்காட் போன்ற வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்தப்படும்போது, சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் லாபத்தில் நில உரிமையாளர்கள் குறிப்பிட்ட தொகையை பெறும் வகையில் சட்டம் இயற்ற வேண்டுமென என மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது

 

பரனூர் விமான நிலையம், என்.எல்.சி, சிப்காட் போன்ற வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்தப்படும்போது, சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் லாபத்தில் நில உரிமையாளர்கள் குறிப்பிட்ட தொகையை பெறும் வகையில் சட்டம் இயற்ற வேண்டுமென என மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள வல்லம் கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக கடந்த 1997 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு, 2016ஆம் ஆண்டில் சொற்ப தொகைதொகை மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சிப்காட் சிறப்பு தாசில்தாரிடம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் வசந்தா கங்காதரன், நவ்ஷீன் பாத்திமா, அம்ரீன் பாத்திமா, செய்தா மதீன், முகமது இம்ரான் ஆகிய நில உரிமையாளர்கள் தகவல் கேட்டனர். உரிய தகவல் வராததால் சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுக்கள் மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு தாசில்தார் தரப்பில் கையகப்படுத்தபட்டதற்கான தொகை மாவட்ட கருவூலத்தில் உள்ளதாகவும், அந்த பில்களும் காலாவதியாகிவிட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்பின்னர், தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் பிறப்பித்த உத்தரவில், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சாலைகள், அரசு அலுவலங்கள் ஆகியவற்றுக்காக நிலத்தை கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முழு இழப்பீடு தொகையையும் அரசு தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் தொழிற்பேட்டைகள் போன்ற வணிக நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும்போது உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வணிக பயன்பாட்டுக்காக நிலம் கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டை முழுவதும் தந்துவிட்டால் பணத்தை கையாள்வது தொடர்பாக அவர்களுக்கு தெரியாமல் அந்த தொகையை விரைவில் செலவு செய்துவிடுவார்கள் என்றும், மீதமுள்ள இழப்பீடு தொகைக்கு பதிலாக சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் லாபத்தில் ஒரு பகுதியை நில உரிமையாளர்களுக்கு பங்காக தரலாம் எனவும், அப்போதுதன் நில உரிமையாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என்று அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில திட்டக்குழு உரிய சட்டத்தை கொண்டுவருவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்,
இதே நடைமுறையை பரனூர் விமான நிலைய திட்டத்திற்கும், நெய்வேலி நிலக்கரி கழக திட்டத்திற்கும் நிலம் கையகப்படுத்தும்போது செயல்படுத்தினால் நிலத்தை தரும் மக்களுக்கும் நம்பிக்கை வரும் என குறிப்பிட்டுள்ளார்.

நிலத்தை இழப்பவர்களும் ஏழைகள்தான் என குறிப்பிட்டுள்ள ஆணையம், அவர்களுக்கு இழப்பீடு வாங்கி தருவதற்காக சட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு செய்து தரவேண்டும் என்றும், இதன்மூலம் நிலத்திற்கான இழப்பீடுகள் தொடர்பாக நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளும் விரைந்து தீர்த்துவைக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

You may also like...