பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராடியதற்காக தாக்கி, சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராடியதற்காக தாக்கி, சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை – சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 2018 ம் ஆண்டு ஜூன் மாதம் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு, போராட்டத்திற்குப் பின், சக கட்சியினருடன் ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்தனர்.

அங்கு வந்த செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி, உதவி ஆய்வாளர்கள் முத்துகுமாரசாமி, ராஜசேகர் ஆகியோர், தன்னை கடுமையாக தாக்கி, ஆபாசமாக திட்டி, புதுபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சட்டவிரோதமாக சிறைவைத்ததாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். போலீசாரின் இந்த செயல் மனித உரிமையை மீறிய செயல் என அதில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த புகார் மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், 2006 முதல் 2016 வரையிலான 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்த டில்லிபாபுவை போலீசார் நடத்திய விதம் குறித்து அதிருப்தி தெரிவித்ததுடன், ஆவண ஆதாரங்களில் இருந்து மனித உரிமை மீறல் நிரூபணமாகியுள்ளதாக கூறி, அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்த தொகையில் டி.எஸ்.பி.யிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயையும், இரு உதவி ஆய்வாளர்களிடம் இருந்து தலா 25 ஆயிரம் ரூபாயையும் வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...