நூறு நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் முருங்கை மரங்களையும், பனை மரங்களையும் நட உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

நூறு நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் முருங்கை மரங்களையும், பனை மரங்களையும் நட உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கிராமபுற மக்களின் வாழ்வாதாரத்துக்காக, வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் 2006ம் ஆண்டு மத்திய அரசு, ஆண்டுக்கு நூறு நாள் வேலை வழங்கும் திட்டமான, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் புதிய குளங்கள் வெட்டுவது, குளம், குட்டை, ஊரணிக்ளை தூர்வாருவது, கரைகளை பலப்படுத்துவது, சாலை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், கிராம மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக, நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் முருங்கை மரங்களையும், பனை மரங்களையும் தமிழகத்தில் நட உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

பல மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மற்றும் பல பொருட்கள் உற்பத்தி செய்ய பயன்படும் பனை மரங்களை நடக் கோரி 2021ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி மத்திய – மாநில அரசுகளுக்கு அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

You may also like...