நீதிபதி, saravanan அரசு எடுத்து வரும் நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூலை 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்
தருமபுரி சாலை விநாயகர் கோவில் சொத்துகளை மீட்டு பாதுகாக்க வேண்டும் என்ற மனு மீது அரசு எடுத்து வரும் நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருத்தொண்டர்கள் சபை நிறுவனரான ஏ. ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தருமபுரியில் உள்ள அருள்மிகு சாலை விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் 1948ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், இந்த கோவில் தற்போது ராமசிரமம் சுப்புச்செட்டி கட்டளை தாரர் பொறுப்பில் பராமரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த கோவிலை கடந்த 2021ஆம் ஆண்டு சென்று பாரவையிட்டபோது, கோவில் நிலங்களை பராமரிப்பதில் முறைகேடுகள் இருப்பதாக கண்டறிந்து, இந்து சமய அறநிலையத்துறை, வருவாய் துறை உள்ளிட்ட துறைகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டது தொடர்பாக கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியிடம் மீண்டும் புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என குற்றம்சாட்டியுள்ளா.
எனவே சாலை விநாயகர் கோவில் சொத்துகளை மீட்டு பாதுகாக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சி. சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், கோவில் சொத்துகளை மீட்க நடவடிக்க எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசு எடுத்து வரும் நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூலை 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்