தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வெளிநாடுகளிலிருந்து சுமார் ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி இறக்குமதி டெண்டரை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்த்து புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால்
வெளிநாடுகளிலிருந்து சுமார் ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி இறக்குமதி டெண்டரை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்த்து புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மின் வாரிய முன்னாள் பொறியாளர் செல்வராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் மின் வாரியத்திற்கு 1,330 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய அறிவிக்கப்பட்ட டெண்டரில் பல்வேறு விதிகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சில குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சாதகமாக இந்த டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்திய கணக்கு தணிக்கை துறையின் அறிக்கையில், கடந்த முறை நடந்த நிலக்கரி ஊழல் குறித்து சுட்டிக்காட்டிய மனுதாரர், தமிழகத்தில் இறக்குமதி செய்யவுள்ள நிலக்கரியில், ஊழலை தடுக்க வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தலைவர், மத்திய ஊழல் தடுப்பு ஆணையர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஆகியோர் அடங்கிய கூட்டு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப அமர்வில் மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகியவற்றிற்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் பட்டியலிடப்படாமல் இருந்த நிலையில், இந்த மனுவை மீண்டும் உடனடியாக விசாரணைக்கு எடுத்து விசாரிக்ககோரி தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் முறையிட்டார்.
அப்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தமிழக அரசு டெண்டரை அறிவிக்க உள்ளதாகவும், அதற்கு முன்னதாக தங்களுடைய மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மேலும், இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தையும் எதிர்மனுதாரராக சேர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கை மீண்டும் வரும் 11 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவித்தனர்
…