திருவண்ணாமலை மாவட்டத்தில் விஜய நகர பேரரசின் புராதன குகை, சமணப்படுகை உள்ளிட்டவை இருக்கும் மலையில் நடைபெறும் குவாரி நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் விஜய நகர பேரரசின் புராதன குகை, சமணப்படுகை உள்ளிட்டவை இருக்கும் மலையில் நடைபெறும் குவாரி நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தை
    சேர்ந்த கே. வீரப்பன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், போளூர் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் விஜய நகர பேரரசின் குகைகள், சமணப் படுகைகள் உள்ளிட்ட வரலாற்று நினைவுச் சின்னங்கள், கோவில் உள்ளிட்ட புனிதமான இடங்களால் சூழப்பட்டுள்ள கோபுரமலை என்பது வருவாய்த் துறை பதிவேடுகளில் மலை புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    கைவினை பொருட்கள் மூலம் வருவாய் ஈட்டும் வகையில் மலையில் சிறிய அளவிலான கற்களை உடைக்க அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதை தவறாக பயன்படுத்தும் சுய உதவி குழுக்கள் கல் உடைக்கும் நிறுவனங்களுக்கு உள் குத்தைகைக்கு கொடுத்துவிடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    அந்த ஒப்பந்ததாரர்கள் மலைகளை உடைக்க அதிநவீன இயந்திரங்களையும், வெடி பொருட்களையும் பயன்படுத்துவதால் விவசாய நிலம் மற்றும் சுற்றுப்புற குடியிருப்புகளில் கற்கள் சிதறி தெறிப்பதாகவும், விவசாய நிலம், கால்நடைகள், பறவைகள் பாதிக்கபடுவதாகவும், வெடிபொருள் பயன்பாடு கடுமையான அதிர்வை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

    குறிப்பாக சிவக்குமார் என்ற ஒப்பந்ததாரர் அரசாங்கத்திற்கு உரிய உரிமம் செலுத்தாமல் சட்டவிரோதமாக குவாரிகளை நடத்தி இயற்கை வளங்களை திருடுவதால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், குவாரியின் ஏலம் கடந்த மார்ச் மாதமே முடிந்த பிறகும் குவாரியை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து நடத்திவருவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான டன் அளவில் கனிமங்களை அகற்றியுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

    கோபுர மலையை ஆய்வு செய்து இழப்பீடு கணக்கீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட துறைகளுக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். கோபுர மலையை ஆய்வு செய்ய தமிழ்நாடு மாநில தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆனந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, கோபுர மலையில் நடைபெறும் குவாரி நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடைவிதித்தும், வழக்கு குறித்து தமிழக அரசும், ஒப்பந்ததாரர் சிவக்குமாரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...