காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பழங்குடியினருக்கு ஒதுக்கிய உத்தரவுக்கு விதித்த தடையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பழங்குடியினருக்கு ஒதுக்கிய உத்தரவுக்கு விதித்த தடையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

அடுத்த மாதம் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவுக்கு உட்பட்ட கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து கொளத்தூரைச் சேர்ந்த பி.பாஸ்கர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஊராட்சியில் வசிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியினர் குறித்த புள்ளிவிவரங்களை தவறாக குறிப்பிட்டு, தலைவர் பதவி, பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி, ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கிய உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டு இருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1195 பழங்குடியின வாக்காளர்கள் இருந்ததால், ஊராட்சி மன்ற தலைவர் பதவி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டதாக சுட்டிக் காட்டப்பட்டது.

ஆனால், மனுதாரர் தரப்பில் 2016ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அமைத்த குழுவின் அறிக்கையில், கிராமத்தில் 59 பழங்குடியினர் மட்டுமே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று இருந்தாலும் தேர்தல் நடைமுறைகளில் முறைகேடுகள் நடக்கும் போது அதை நீதிமன்றம் தலையிட எவ்வித தடையும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையிலேயே தலைவர் பதவி ஒதுக்கப்படுவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலத்தில் எந்த அரசாக இருந்தாலும் அவை விருப்பப்படும் பட்சத்தில் குறுகிய காலத்தில் காலத்திலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும் என தெரிவித்த நீதிபதிகள், கணக்கெடுப்பு முறையாக இல்லை என்றும், முறையான கணக்கெடுப்பு இல்லாமல் தலைவர் பதவியை பழங்குடியினருக்கு ஒதுக்கிய உத்தரவை தடை செய்த தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி, அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

You may also like...