கடவுளை வழிபடுவது ஒவ்வொருவருக்கும் உள்ள தனிப்பட்ட நம்பிக்கையின்படி உள்ள உரிமை எனவும் நீதிபதி குமரேஷ்பாபு தெளிவுபடுத்தி உள்ளார்.

கடவுளை வழிபடுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட நம்பிக்கையின்படியான உரிமை என சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேலநேரி கிராமத்தில் 12 ஆண்டுகளாக முடப்பட்டுள்ள அருள்மிகு வாலகுருநாத சுவாமி திருக்கோவிலை திறப்பதாக சிறப்பு அலுவலர் வெளியிட்ட நோட்டீசுக்கு தடை விதிக்க கோரிய மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த சீனி, மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில் அருள்மிகு வாலகுருநாத சுவாமி திருக்கோயில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த 12 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளதாகவும், அனைத்து தரப்பினரிடமும் சுமூக உறவு எட்டப்படாத நிலையில், சிறப்பு அலுவலர் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதால், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டு. அந்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. குமரேஷ் பாபு, மூடப்பட்டு உள்ள கோவில் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர அறநிலையத்துறையால் தகுதியான சிறப்பு அலுவலர் 2011ஆம் ஆண்டிலேயே நியமிக்கப்பட்டாலும், கடந்த 12 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் தொடங்கப்படாமல் இருக்கும் நிலையில், தற்போது திடீரென கோவில் திறக்கப்படும் என நோட்டீஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமானது கோவில் என மனுதாரர் கூறினாலும் கூட, தனிப்பட்ட கோவிலாக அறிவிக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார். தற்போதைய நிலையில் கோவில் நிர்வாகத்தில் பிரச்சினை இல்லாதபோது, ​​அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட அலுவலர், திடீரென கோவிலை திறக்க உள்ளோம் என வெளியிட்ட நோட்டீஸ் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல என கூறி, நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இரண்டு குழுக்களுக்கு இடையேயான தகராறு காரணமாக கோவிலை மூடுவதன் மூலம் கடவுளை வணங்குவதை நிறுத்த முடியாது என்றும்,
கடவுளை வழிபடுவது ஒவ்வொருவருக்கும் உள்ள தனிப்பட்ட நம்பிக்கையின்படி உள்ள உரிமை எனவும் நீதிபதி குமரேஷ்பாபு தெளிவுபடுத்தி உள்ளார்.

எனவே, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி கருத்துகளை பெற்று, கோவிலை திறப்பது குறித்து 6 மாதங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

You may also like...