நீதிபதி, ‘கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உள்ளது. அதற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் சமூக வலைத்தளங்களில் பேசுவதா

நீதிபதி, ‘கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உள்ளது. அதற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் சமூக வலைத்தளங்களில் பேசுவதா? சூரிய மின்சக்தியால் தோல் வியாதி வரும் என்று மனுதாரர் வாட்ஸ்-அப்பில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் என்ன படித்துள்ளார்? அவரது கல்வித்தகுதி என்ன? சூரிய மின்சக்தி துறையில் அவர் நிபுணரா? அறிவியல் ரீதியாக இதுகுறித்து ஏதாவது ஆராய்ச்சிகளை மேற்கொண்டாரா?’ என்று மனுதாரர் தரப்பு வக்கீலிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
பின்னர் அவர் கூறுகையில், ‘பொறுப்பற்ற, ஆதாரமற்ற தகவல்களை சமூக வலைத்தளங்களில் பலர் சர்வ சாதாரணமாக பரப்புகின்றனர். தமிழகத்தில் மற்ற மாசுக்களை விட சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவலை பரப்புவதுதான் மிகப்பெரிய மாசுபாடாக உள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற வதந்திகளால் அரசின் நல்ல திட்டங்கள் பொதுமக்களை சென்றடைய முடியாமல் போய்விடும். பொதுமக்கள் மத்தியில் வீண் குழப்பங்கள் ஏற்படும்’ என்று கண்டித்தார்.
எனவே சூரிய மின்சக்தி குறித்து எந்த சமூக வலைத்தளத்தில் மனுதாரர் தகவல்களை பரப்பினாரோ, அதே தளத்தில், தான் அடிப்படை ஆதாரமற்ற தகவலை பதிவிட்டு விட்டதாகவும், தான் தவறை உணர்ந்து விட்டதாகவும் பதிவிட வேண்டும் எனக்கூறிய நீதிபதி, அவ்வாறு மன்னிப்பு கோரினால் மட்டுமே அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பின்னர் வழக்கின் விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
முன்னதாக நீதிபதி தனது உரையில், ‘நாங்கள் (நீதிபதிகள்) பல்வேறு சட்டங்களின் அடிப்படையிலும், பல்வேறு தீர்ப்புகளின் அடிப்படையிலும் தீர்ப்பு வழங்குகிறோம். ஆனால் பொதுமக்களில் சிலர் தாங்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிபதிகளை கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்கின்றனர். ஐந்தாம் வகுப்பு கூட படிக்காதவர்கள் ஐகோர்ட்டின் தீர்ப்பை கடுமையாக விமர்சிக்கின்றனர்’ என்று வேதனை தெரிவித்தார்.

You may also like...